Friday, August 20, 2010

ஹைய்யா எனக்கு கல்யாணம்?!?

நம்மூர்ல பையனோ பொண்ணோ ஸ்கூல், காலேஜ், வேலைக்குப் போயி, கல்யாணம் பண்ணிக்கற வரைக்கும் பெத்தவங்களோட ராடார் ப்ரீக்குவன்சிக்குள்ளதான்(Radar Frequency) இருந்தாகணும்.

வைரமுத்து சொன்ன மூணாம் எட்டில் எல்லாம் இங்க யாருக்கும் திருமணமே நடக்கறதில்லை. நாலாம் எட்டுலதான் பசங்க செட்டில் ஆகவே ஆரம்பிக்கிறாங்க. (இங்க“செட்டில்” ஆகறதுங்கற வார்த்தைக்கான விளக்கம் நபருக்கு நபர் வேறுபட்டாலும், சாகற வரைக்கும் நம்ம மனசு செட்டில் ஆகாதுங்கறது வேற விஷயம்.)

பொதுவா நம்ம ஊருல பெத்தவங்களாப் பாத்து நிச்சயிக்கிற திருமணம், மத சடங்குகளைத் தவிர்த்து, பெரும்பாலும் ப்ராசஸ்(Process) எல்லாம் ஒரே மாதிரியாத்தான் இருக்கும். சில வீட்டுல சீக்கிரமாப் பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருவாங்க, சில வீட்டுல ஒத்தப்படை, கண்டம், திருநள்ளாறுனு கொஞ்சம் லேட்டாகும்.

நம்ப ஆளுகளும் பொறுத்துப் பொறுத்துப் பாப்பாங்க. வேலைக்கு ஆகலேன்னா “அழுத புள்ளைக்குதான் பால்”னு புரிஞ்சுக்கிட்டு, வீட்டுக்கு போனப் போடும்போதெல்லாம்“இப்போதான் ரமேஷ் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன், ரவி கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன்”னு ஜாடையா பிட்டப் போட்டுப் பாப்பாங்க. அசரலேன்னா, கூட்டாளி ஒருத்தனப் புடிச்சு “அப்புறம்.., இவனுக்கு எப்போ”னு மெதுவா வீட்டுல கேக்கச் சொல்லுவானுக. எதுக்கும் மசியலேன்னா கொஞ்சம் கிரிமினலா யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. பொண்ணுக கிட்ட அடிக்கடி பேசற மாதிரி ஒரு செட்-அப் பண்றது. இல்லேன்னா பொண்ணுகளோட வெளிய போற மாதிரி ஒரு பாவ்லா காட்றதுன்னு உருண்டு பொரண்டு எப்படியாவது தங்களோட கல்யாண ஆசைய வீட்டுக்குத் தெரிவிச்சிருவாங்க.

ஆனா என்னிக்காவது வீட்டுல இருந்து, “சரி உனக்குப் பாக்கலாமாப்பா”னு கேட்டா மட்டும், உடனே வெறச்சுக்குவானுக. என்னமோ இதெல்லாம் இவனுகளுக்குப் புடிக்காதுங்கற மாதிரி “ம்ம்.. பாக்கலாம் பாக்கலாம்”னு சலிச்சுக்குவானுக.

அவங்களும் “வேற யாரையாச்சும் மனசுல வெச்சிருக்கியாப்பா”ன்னு இவன் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு இருக்கும்போதுதான் கேப்பாங்க. இவன் எப்படியும் மனசுல ஒரு பத்துப் பதினஞ்சு பேர வெச்சிருப்பான். அதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களுக்குத் தெரியுமா அப்படிங்கறதுதான் இங்க கேள்வியே? கடைசியா ஒரு மாதிரியா மூஞ்சிய வெச்சுக்கிட்டு ” சரி என்னமோ பண்ணுங்க போங்க” அப்படின்னுட்டு பர்மிஷன்(!) குடுத்துருவான

ஆனா “என்ன மாதிரி பொண்ணுப்பா உனக்குப் பாக்கறது?”ன்னு அவங்க கேட்டாத்தான் இருக்கு தீபாவளி.


முதல்ல எல்லாரும் முன்னுரிமை தர்றது புறத்தோற்றத்துக்குதான். இந்த விஷயத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலருக்கு “சின்ன வீடு” பாக்யராஜ் மாதிரி, சாமுத்ரிகா இலட்சணத்தோட வேலைக்குப் போகாத ஒரு பொண்ணு வேணும். சிலருக்கு வேலைக்குப் போகக்கூடிய, திறமையான மற்றும் அழகான பொண்ணு வேணும். தன்னையும் புரிஞ்சுக்கிட்டு, பத்தாததுக்குத் தன்னோட குடும்பத்தையும் புரிஞ்சுக்கணும், உயரம் அஞ்சே அரைக்கால் அடி இருக்கணும், பேசுனா பாடுனா மாதிரி இருக்கணும், பாடுனா ஆடுனா மாதிரி இருக்கணும், அப்படி, இப்பிடின்னு ஆயிரத்து எட்டரை இருக்கும்.

நம்ப பொண்ணுகளும் இதுக்கெல்லாம் சளச்சவங்க இல்லை. அவங்களுக்குப் பையன் அழகா இருக்கணும், ஆனா காதலிச்சிருக்கக் கூடாது. ஆன்-சைட்ல இருக்கணும்,ஆனா எந்தக் கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது. நாட்டுப் பற்று இருக்கணும், ஆனா மினிமம் H1B விசாவாவது வெச்சிருக்கணும். தாடி வெச்சா மாதிரி இருக்கணும், ஆனா ஷேவும் பண்ணி இருக்கணும் – அப்படிங்கற ரேஞ்சுல அவங்களும் நெறைய வெச்சிருப்பாங்க. இதை பற்றி வாலி கூட ஒரு பாட்ல சொல்லிருகாரு?!

“ஹே ஹே என்ன ஆச்சு உனக்கு ” எனததொடங்கும் “காதல்வைரஸ்” பட பாடலைக் கேட்கவும் :)

ஆனா ஒண்ணுங்க, இவங்கல்லாம் கேக்கறா மாதிரி எல்ல்ல்லாத் தகுதியோட இருக்கற ஒரு பொண்ணோ, பையனோ பாக்கணும்னா ஜேம்ஸ் கேமரோன் கிட்ட சொல்லித்தான் செய்யணும்.

இதுக்கெல்லாம் விதிவிலக்கா சிலபேரு “எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தத் தரும்”னு புரிஞ்சுக்கிட்டு சூர்யவம்சம் சின்ராசு மாதிரி “பெரியவங்க, நீங்களாப் பாத்து எதச் செஞ்சாலும், அத நான் ஏத்துக்கறேன்”னு கால்லேயே விழுந்திருவாங்க.

ஏன்னா, ஒவ்வொருத்தருக்கும் இது வாழ்க்கையோட செகண்ட்-ஆப். ஆதனால “ஆயிரத்தில் ஒருவன்” மாதிரி எதுவும் ஆயிடக்கூடாதுங்கறதுல ரொம்பக் கவனமா இருப்பாங்க.

என்னதான் இத்தன நாளா பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சினிமா தியேட்டர்னு பல எடங்கள்ல இவன் பொண்ணு பாத்து இருந்தாலும் அதுக்கப்புறம்தான் ஆபீசியலா(Official) குடும்பத்தோட பொண்ணு பாக்க ஆரம்பிப்பான்.

சின்ன வயசுல, “வாடா, கல்யாணத்துக்குப் போகலாம்”னு கூப்பிட்டா, “வேற வேலை இல்லை உங்களுக்கு”ன்னுட்டு குடுகுடுன்னு கிரிக்கெட் வெளையாட ஓடிப் போயிருவான். ஆனா இப்போ , “ஏம்மா, இந்த மாசம் யாருக்கும் கல்யாணம் வைக்கலையா, ஒரு பத்திரிகைக் கூட வரலே”ன்னு கேக்கற அளவுக்கு மாறிப் போய்டுவான். ஏன்னா, எப்படிப் பாத்தாலும் எல்லாக் கல்யாணத்துலயும், இந்த மாதிரிக் குறைஞ்சது கண்ணுக்குத் தெரியாம நாலஞ்சு குரூப் பொண்ணு பாத்துக்கிட்டுதான் இருப்பாங்க.

ஆக “ஒரு கல்யாணத்துக்கோ, கோவிலுக்கோ போயி சைட் அடிக்கறவன் மனுஷன், குடும்பத்தோட போயி சைட் அடிக்கறவன் பெரிய மனுஷன்”ங்கறத அன்னலட்சுமி சொல்லாமேயே நாம புரிஞ்சுக்கணும்.

முதல கட்டமா ,“தம்பி ஒரு நல்ல போட்டோ ஒண்ணு இருந்தா எடுத்துக் குடுப்பா”ன்னு வீட்டுல கேப்பாங்க.

ஆனா அப்படி இவங்க ஒரு நாள் கேப்பாங்கன்னு சொல்லி, அந்த நல்ல போட்டோவ அவன் கடைசி ரெண்டு வருசமாத் தொடர்ச்சியா எடுத்துகிட்டுதான் இருந்திருப்பான்.

“மாப்ள, என்ன மட்டும் ஒரு சோலோ எட்றா” ன்னு எதாவது பிக்னிக் ஸ்பாட்ல யாராவது சொல்லி உங்க காதுல விழுந்தா, “சோலோ” அப்படின்னாலே ஒருத்தர மட்டும் எடுக்கறது தானே?ன்னெல்லாம் அறிவு பூர்வமா ஆராய்ச்சி பண்ணாம, அங்க ஒருத்தர் மேட்ரிமோனிக்கு(Matrimony) ப்ரோபைல் போட்டோ (Profile photo)எடுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கார்னு அவரு ஜாதகத்தப் பாக்காமயே நீங்க பட்டுன்னு சொல்லிறலாம்.

“ப்ளீஸ்டா, மறுபடியும் எட்றா, தல கலைஞ்சிரிச்சு / கண்ண மூடிட்டேன்”னு கூடவே இன்னொரு சவுண்டும் வரும் கண்டுக்காதீங்க…

கூந்தல் வனப்புக் குறைஞ்சவங்க எதிர்காத்து இல்லாத எடமா நிக்கணும், ஷாம்பூ கீம்பு போட்டு புஸ்ஸுனு வெச்சுக்கணும், தொப்பை இருக்கறவங்க மூச்ச வேற நல்லா இழுத்துப் புடிச்சுகிட்டே சிரிக்கணும்னு போஸ் குடுக்கறதும் கூட ரொம்ப ஒரு கஷ்டமான வேலதாங்க.

இந்த போடோடோவ எடுக்க மாட்றவன்தாங்க, உலகத்துலேயே பெரிய பொறுமைசாலி.

இதுல பரஸ்பரம் மாத்தி மாத்தி எடுத்துக்கறதும் உண்டு. “நான் பார் உன்ன நச்சுனு எடுத்திருக்கேன், நீ ஏன்டா இப்படி எடுத்து வெச்சிருக்கே”ன்னு அடிச்சுக்குவாங்க. இப்படி ஒருத்தருக்கு எடுக்கப்படும் சாம்பிள் சராசரியா 300ல இருந்து 500 வரைக்குமாவது இருக்கும். (டிஜிட்டல் கேமராவக் கண்டு புடிச்சவன் நல்லா இருக்கணும்) இப்படி இது வரைக்கும் உலகத்துல எடுத்த சோலோவ பிரிண்ட் போட்டு அடுக்கி வெச்சா அகிலமே அரை கிரௌண்ட் மாதிரிதான் தெரியும்.வித விதமா, ரகம் ரகமா ட்ரை பண்ணி, ட்ரை பண்ணி அரைகுறை மனசோடதான் ஒவ்வொருத்தரும் அந்த பைனல் போட்டோவப் போட்டிக்கு அனுப்பறாங்க.

சில பேரு நேர ஸ்டுடியோவுக்கு போயி, சாந்தமா முகத்துல பால் வடிய, ஒரே ஷாட்ல மேட்டர சிம்ப்ளா முடிச்சிருவாங்க.

அடுத்து பயோடேட்டா, ஜாதகத்தோட அந்த நல்ல போட்டோவையும் வெச்சு சமுதாய நதியில கலக்க விட்றுவாங்க.(ஏனைய வழிகள் – மாட்ரிமோனி சைட், மங்கள சந்திப்பு,சொந்தக்காரங்க விடு தூது இத்யாதி, இத்யாதி(etc.,etc.)

இந்தக் கால கட்டத்துல பசங்க ரொம்பக் கண்ணியமாவும், கனிவாவும், கவனமாகவும் நடந்துக்குவாங்க. அவங்க சம்பந்தமான ஆளுகளோட அப்பப்ப “என்ன பாஸ், உங்க பைல் க்ளோஸ் ஆயிடுச்சு போல? நம்புளுது ஒண்ணும் முடிவே தெரியல?”னு பரஸ்பரம் விசாரிச்சுக்குவாங்க. இதே கால கட்டத்துல அவங்களுக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ பெரும்பாலும் ஒரு பேக் ரவுண்ட் செக்கும் நடக்கும். (“இது என்னோட நேர்மையக் கேலி பண்ற மாதிரி இருக்கு”னு சொல்லவும் முடியாது)

எப்படியும் பத்து பொண்ணு போட்டோ வருதுன்னா, இவன் ஒரு ரெண்டு பேர செலக்ட் பண்ணி, அது டேலி(Tally) ஆகி மேலிடத்துக்குப் (பெத்தவங்கதாங்க) போயி, லைட்டா ஒரு பேக்ரவுண்ட் ஸ்கேன் (Background scan)ஆகி, அப்ரூவல் ஆனதும் நேர நம்ம வில்லன் இருக்காரே, அதாங்க ஜோசியரு, அவருகிட்ட பைல் மூவ் ஆகும். அவரு வேறென்ன சொல்லிடுவாரு, “ரெண்டு பொருத்தம் கூட இல்ல, மீறிப் பண்ணி வெச்சா 2012ல உலகம் அழியறதுக்கு நாம் பொறுப்பாயிடுவோம்”ங்கறா மாதிரி எதாவது சொல்லிடுவாரு.

இதே விளையாட்டு அங்க பொண்ணு வீட்டுலயும் நடக்கும். பெரும்பாலும் நம்மாள் செலக்ட் பண்ணி வெச்ச அந்தப் பத்துல ரெண்டு பொண்ணு, இவனப் பத்துல எட்டு ஆக்கி வெச்சிருக்கும். ஆக, என்னிக்கு ரெண்டு கிளியும் ஒரே சீட்ட எடுக்குதோ அன்னி வரைக்கும் இந்த விளையாட்டுத் தொடர்ந்துகிட்டே இருக்கும்.

ஒரு கட்டத்துல இந்த விளையாட்டு போர் அடிச்சுப் போயி, வெறப்பா “மணல் கயிறு” கிட்டு மணி மாதிரி இருந்தவங்க மொதல்ல கண்டிசன்ல இருக்கற AND Gateஎல்லாத்தையும் OR Gateஆ மாத்திப் பாப்பாங்க,(நான் ஒரு ECE Enginer’னு காட்டணுமில்ல அதான் :) கொஞ்சம் டெக்னிக்கலா… :) ) அப்புறம் நாள்பட, நாள்பட கண்டிசன்களையே ஒவ்வொண்ணாக் கழட்டிவிட்டுக்கூடப் பாப்பாங்க. கடைசிலபெட்ரோமாக்ஸ் கெடைக்கலேனா கூடப் போவுது, பந்தம் கெடச்சாக் கூடப் போதும்”னு எதார்த்தத்துக்கு எறங்கி வந்தவங்க நெறையப் பேரு. .விட்டுக் கொடுத்தலே விவாகம், காம்ப்ரமைஸ் தான் கல்யாணம் அப்படிங்கறத இங்க இருந்தே அவங்க புரிசுக்குவாங்க.

ரெண்டு குடும்பமும் பரஸ்பரம் செலக்ட் பண்ணி, ஜோசியர் சார் ஓகே பண்ணி, ஒரு நல்ல நாளாப் பார்த்து பொண்ணு பாக்க ஏற்பாடு ஆகும். பொண்ணு பாக்கப் போகும் போதே முக்காவாசி முடிவு பண்ணிட்டுத்தான் போவாங்க. அந்தக் கால்வாசிய முடிவு பண்ண ரெண்டு பேரும் தனியாப் பேசணும்னு சொல்லுவாங்க. பத்து விநாடி மௌனம், முப்பது விநாடி ஸ்டார்ட்டிங் ட்ரபுள்,கொஞ்சம் உபசரிப்பு, சில சுய தம்பட்டம், “அது தெரியுமா, இது தெரியுமா”, “இது புடிக்குமா, அது புடிக்குமா”, இடைல இடைல கொஞ்சம் வழிசல்னு ஒரு மாதிரியாப் பேசிட்டு வெளிய வந்திருவாங்க.

இதுதான் பொண்ணுன்னு உறுதி ஆயிட்டா,வேறென்ன? நம்ம டைட்டில் தான்! :)

ஹைய்யா எனக்கு கல்யாணம் ‘னு சின்னத்தம்பி பட Climax’ல வர லூசு மாதிரி வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பானுக

பிரச்னை இல்ல. இல்லேன்னா என்ன? திரும்ப மேல இருக்கற பத்தியப் படிங்க.

ஒரு வழியா பொண்ணு ஓகே ஆயிடுச்சுன்னா, பெத்தவங்க தேதி குறிக்கறாங்களோ இல்லையோ, நம்மாளு மொதல்ல போன் நம்பரக் குறிச்சிக்குவான். அப்புறமென்ன?

ஒரே மாசத்துல பில்லு 10,000னு வந்து பல்லக்காட்டும் :)


இதுல நெறைய வெரைட்டி இருக்காங்க, பேட்டரி மாத்தி, சிம் மாத்தி, போன் மாத்தித் தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்கறது, விடிய விடியப் பேசறது, விடிஞ்சு எந்திரிச்சுப் பேசறது. அலாரம் வெச்சுப் பேசறதுன்னு, தொடர்ந்து நாப்பது மணி நேரம் பேசறதுன்னு சத்தமில்லாம நெறையப் பேரு கின்னஸ் சாதனை புரிஞ்சுகிட்டுதான் இருக்காங்க. இந்த மாதிரி ஆளுங்களப் பாத்தீங்கன்னா நைட் ஷிப்ட்ல இருந்து வந்த எபக்ட்லதான் காலைல ஆஃபீசுக்கே வருவாங்க.

போன்ல பேசற நேரம் போக அப்பப்ப சினிமாவுக்கோ, பீச்சுக்கோ, பார்க்குக்கோ வீட்டுக்குத் தெரிஞ்சோ, தெரியாமையோ போயிட்டு வருவாங்க. எங்க காலத்துல நாங்க பாக்காததா அப்படின்னு பெரியவங்களும் கண்டுக்காத மாதிரி விட்றுவாங்க.

இந்தக் காலகட்டத்தில் அம்பிகள் கூட ரெமோவாக மாறியதையும், வீரவசனம் பேசிய பல ‘மௌனம் பேசியதே’ சூர்யாகளும் சரமாரியாகச் சரண் அடைந்ததையும் சரித்திரம் சிரிப்போடு, சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.

கல்யாண நாள் நெருங்க நெருங்க, பத்திரிகை விநியோகம், புதுத் துணி எடுக்கறதுன்னு பரபரப்பாக் காலம் ஓடிரும்.

இன்னியத் தேதிக்கு நம்ம நட்பு வட்டாரங்களுக்குப் பத்திரிகை கொடுக்கறது ஒரு பெரிய விஷயமே இல்ல. ரெண்டே நிமிஷம். இன்விடேசன ஸ்கேன் பண்ணி, “Please consider this as my personal invite”னு மெயில்ல அட்டாச் பண்ணிட்டம்னா வேலை முடிஞ்சுது. ஆனா பழைய டைரியைத் தூசு தட்டி எடுத்து, “மனம் கவர்ந்த மங்கையை மணக்கும் முன் மணவோலை அனுப்ப மறவாதே”ன்னு ஆட்டோகிராப் போட்டுக் குடுத்த எல்லாக் கல்லூரி நண்பர்களோட அட்ரஸையும் கண்டுபுடிச்சு, அவங்களுக்குப் பத்திரிகையத் தபால்லேயோ/ நேர்லேயோ குடுக்கற சொகத்தக் கொஞ்சம் கொஞ்சமா நாம இழந்துகிட்டு வர்றோம் அப்படிங்கறத யாரும் மறுக்க முடியாது.

சரி கல்யாணத்துக்கு அப்புறம் என்ன?

ஒரு நீலகலர் டப்பர்வேர்ல (Tupperware) சாப்பாட்ட எடுத்துக்கிட்டு ஆபீஸ் போக வேண்டியதுதான். மறந்து விடாதீர்கள் மக்களே , கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பெருமாமா…..ற்றதுக்குத் தயாராகுங்கள்!

வாழ்த்துக்கள்


நன்றி:ராம்பிரசாத்

Tuesday, August 17, 2010

Monday, August 16, 2010

போரடிக்குது போரடிக்குது போரடிக்குது போரடிக்குது


பயங்கரமா போரடிக்குது! எவ்வளவு நேரம்தான் சாமியார் பத்தின பதிவுகள் படிக்கிறது?! ’I am bored'னு கூகிள்லே தேடினப்ப கிடைச்ச சில அருமையான(?!?) பொழுதுபோக்குகள்.

1) பென்குயினைப்(Penguin) பற்றி ஒரு இரண்டு நிமிடம் தொடர்ந்தார்ப் போல் நினைக்காமல் இருக்க முயலவும். பதிவர்கள் நித்யானந்தம் பற்றி நினைக்காமல் இருக்க முயலலாம்!!

2)ஒரு வார்த்தையை திரும்பத் திரும்ப உரக்கச் சொல்லவும். ஒரு நிலையில் அந்த வார்த்தைக்கான பொருள் அர்த்தமில்லாமல் போவதை உணரலாம். உதா : இந்தப் பதிவின் தலைப்பு.

3) இமைகளை அழுத்தமாக மூடி மூடி திறவுங்கள்(கதவை அல்ல). பிறகு கண்களை இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள். உள்ளுக்கு பலவிதமான ஒளிப் புள்ளிகள் விளையாடுவது தெரியும்.

4) அலுவலகத்தில் நிறைய பேர் உங்களைப் போலவே இருந்தால் இப்படி செய்யலாம்.

5) அலுவலக போர்டிலோ போட்டோஷாப்பிலோ இப்படியெல்லாம் கிறுக்கலாம்.

போனஸ் :