Sunday, April 3, 2011

முன்னோர்களின் நவீன தொழில்நுட்பம்

பலவிதமான உலகங்களுக்கு இதிகாச நாயகர்களும் புராண புருஷர்களும் சென்று வந்ததற்கான ஆயிரமாயிரம் குறிப்புகள் நமக்கு கிடைக்கின்றன. இதில் பெரும்பாலானவற்றை கதைகள் என்றும் கவிஞர்களின் அதீத கற்பனை என்றும் நாம் ஒதுக்கிவிடுகிறோம்.

இந்த குணத்தினால்தான் பல அரிய பொக்கிஷங்களை நாம் இழந்திருக்கின்றோம். புராணங்களும், இதிகாசங்களும் நடக்காதவற்றை நடக்கவே முடியாதவற்றை பற்றி பேசுகின்றன என்று கருதி வந்த நமக்கு அவைகள் உண்மைக்குப் புறம்பானவை அல்ல; ஒரு காலத்தில் பூமியில் நடந்த சத்தியமான சரித்திரங்களே என்பதை நிரூபிக்க பல சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன.

அமெரிக்கா அனுப்பிய விண்கலம் ஒன்று கடலுக்கு அடியில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாலம் போன்ற ஒன்று புதைந்து இருப்பதை தெள்ளத் தெளிவாக படம்பிடித்து காட்டியுள்ளது. இந்தப் படம் வானரங்கள் சேது பந்தனம் அமைத்தது வால்மீகியின் கற்பனை அல்ல நிஜமே என்பதை முகத்தில் அடித்தாற்போல் நமக்கு பறைசாற்றுகிறது.

ஸ்ரீ கிருஷ்ணனின் காலத்திற்கு பிறகு துவாரகையை கடல் கொண்டதாக பாகவதம் கூறுகிறது, பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துவாரகை கடலுக்கு அடியில் இருப்பதற்கான ஆதாரங்கள் குஜராத் மாநில கடல் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளன.

இதேபோன்று டில்லிக்கு அருகில் உள்ள குருஷேத்ராவில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு கிடைத்த சில எலும்புகளில் அணுக்கதிர் பாய்ந்துள்ளதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய இருப்பதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இது அந்தக் கால அஸ்த்திர வல்லுநர்கள் அணு ஆற்றலைப் பயன்படுத்தும் விதத்தை திறம்பட அறிந்திருந்தார்கள் என்பதை நமக்கு புலப்படுத்துகிறது.
இவற்றை எல்லாம் வைத்துப்பார்க்கும் போது பறக்கும் திறனுடைய வாகனத்தை நமது முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் என்பதிலும் அவ்வாகனங்களின் மூலமாக பல கிரகங்களுக்குச் சென்று வந்தார்கள் என்பதிலும் நமக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.

மாக்ஸ்முல்லர் தம்முடைய வாழ்க்கை வரலாற்றில் நாம் இப்போது கண்டுபிடித்ததாகக் கூறும் நீராவி இயந்திரம், மின்சாரம், தந்தியில்லா தொலைத்தொடர்பு ஆகியவைகள் வேத காலத்திலேயே ரிஷிகளுக்கு நன்றாகத் தெரிந்து இருந்தன.

வேதகாலத்தில் வெற்றிகரமாக கையாளப்பட்டு வந்த பல சாதனங்களின் குறிப்புகள் அவற்றை பின்பற்றிய முறைகள் ஆகியவற்றை நாம் இழந்து விட்டோம்; அவர்கள் கண்டுபிடித்து கையாளாத நவீன சாதனங்கள் எதுவுமே இல்லை என்று கூறி இருக்கிறார்.

மாக்ஸ் முல்லர் கண்மூடித்தனமான நம்பிக்கை வாதியோ தமது கொள்கைக்காக வலிய வாதிடுபவரோ அல்ல. மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர். வேதங்களில் பொதிந்துள்ள பல அரிய நுண்ணிய விஷயங்களை உலக மக்களுக்கு தெரியப்படுத்திய சாதனையாளர். எனவே அவர் கூற்றை ஆப்தவாக்கியமாக எடுத்துக்கொள்வதில் எந்த தவறும் இல்லை.
நமது வேதங்களிலும் வெறுமென இறைவனை வழிபடுவதற்கான குறிப்புகள் மட்டும் இல்லை. விவசாயம், இரசாயனம், வானியல் பற்றியெல்லாம் தேவ ரிஷிகள் விரிவாகக் கூறி உள்ளார்கள். இருக்கு வேதம் ஐந்தாம் சாகை பதினோராம் அத்தியாயம் ஆறாம் ஸ்லோகத்தில் காற்று நிரப்பிய ரதம் ஒன்றை வானவெயில் நம் இஷ்டப்படி ஓட்டுவதற்கான வழிமுறை கூறப்பட்டுள்ளது.

இன்று விஞ்ஞானம் பல மடங்கு வளர்ந்துவிட்டது. வான்வெளியில் விண்கலங்கள் ஏவுகணைகள், எனப் பல விண்ணை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

இவைகள் அனைத்தும் விண்வெளி உலகின் தத்துவமேதை எனப்படும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரின் தீர்க்க தரிசனத்தால் உருவானவையே; இன்று உலகத்தில் நாம் வானை அளந்துகொண்டிருக்கின்ற விமானங்களுக்கு ஆதாரமிட்டவர்கள் ரைட் சகோதரர்களே (1903) என உலகம் பெருமை அடைந்தாலும் உண்மையில் முதன் முதலில் விமானத்தைக் கண்டுபிடித்தவர் கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரே. 1894 ஆம் ஆண்டு அவர் இந்த சாதனையை அவர் நடத்தி முடித்தார்.

உலகில் உள்ள பல நாட்டு நூல்களிலும் விமானங்கள், ஏவுகணைகள் பற்றிய செய்திகள் காணப்பட்டாலும் கூட தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மிகப் பழைய காலம் முதலே இவை பற்றி குறிப்புக்கள் காணப்படுவதோடு அவற்றின் அமைப்பு முறைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து விமானத்தின் முன்னோடிகள் நம் மூதாதையர்களான இந்துக்களா? என்று நமக்கு எண்ணத் தோன்றுகின்றது.

இருக்கு வேதம், இராமாயணம், மகாபாரதம், சமரங்கன சூத்திரா, வைமானிக சாஸ்திரம் எனப் பழைய நூல்களில் விமானம் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறன. இவை வெறும் கற்பனையில் உருவானவை என்றோ மூட நம்பிக்கையை விதைக்கின்ற புராண இதிகாசங்கள் என்றோ நம்மால் அப்படியே ஒதுக்கி விடவும் முடியவில்லை.
இருக்கு வேதமானது நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் கருதப்படுகிறது. இதில் போர்க் கடவுளான இந்திரன் விமான ரதத்தில் பறந்து வந்து அசுரர்கள் மீது போர் நடத்தியதாகவும் மயன் இவ்வானவூர்தியை ஓட்டியதாகவும் தகவல்கள் உள்ளன.
அத்துடன் வருணன் போன்ற தேவர்கள் மிகச் சிறந்த வானவூர்தியில் வானவெளியில் சென்றதாகவும் புஷன் என்பவன் மிகச்சிறந்த ஓட்டியாக திகழ்ந்தான் என்ற குறிப்பும் காணப்படுகிறது. இது கற்பனையில் உருவானது எனக் கூறினாலும் வானில் பறப்பது சாத்தியமே எனக் கூறியதிலிருந்து விமானத்தின் முன்னோடிகளாக இந்துக்கள் திகழ்ந்தனர் எனக் கருதவும் இடமுண்டு.

அடுத்து இராமாயண காலத்தில் இராவணன் என்னும் தமிழ் மன்னன் புஷ்பக விமானத்தில் பறந்ததாகவும் மயன் என்பவனின் கைவண்ணத்தினால் இது உருவாகியதாகவும், குபேரன் என்னும் மன்னனுக்கே இப்புஷ்பக விமானம் சொந்தமானது எனவும் இதை இராணுவணன் கைப்பற்றி அதில் அவன் விண்வெளி முதல் கொண்டு பல உலகங்களையும் சுற்றி வந்தான் எனவும் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். இது வால்மீகியின் கற்பனையாகக் கூட இருக்கலாம்.

ஆனால் இவற்றை ஆதாரப்படுத்துவது போல் இலங்கையிலே நுவரெலியா என்னும் மாவட்டத்திலே இராணுவணன் என்னும் மாமன்னன் இராமரின் மனைவியான சீதையை சிறை வைத்ததாகக் கூறப்படும் சீதாஎலிய என்ற ஒரு இடம் உண்டு. இந்த இடத்திலிருந்து உலகத்தின் முடிவு (தீorlனீ ரிnனீ) என்று அழைக்கப்படும் இடம் நோக்கி கிட்டத்தட்ட 8 மைல் தூரம் வரை சென்றால் ‘குவான் பொல (guvaan pola) இடத்தை அடையலாம்.

இப்பெயரின் தமிழ் வடிவம் விமானச் சந்தை என்பதே. இந்த இடத்தில் விமானத்தின் இரு ஓடு பாதைகள் இருந்ததற்கான அடையாளங்களாக மலையில் நீண்ட மலைச் சமவெளிகளைக் கொண்ட இரு பிரதேசங்கள் உண்டு.

இது இராவணன் பயன்படுத்தியதாகக் கூறப்படும் புஷ்பக விமானத்தின் ஓடுபாதை என்பது பலரது கூற்று. இதை உறுதிப்படுத்துவது போல் 1971ஆம் அமெரிக்க புவியியல் ஆய்வாளர் ஒருவர் இராவணன் என்றதொரு தமிழ் மன்னன் வானவூர்தியுடன் சிறப்பான ஆட்சி செய்தான், என்பதனை அறிந்து இப்பிரதேசத்திற்கு வந்து இப்பிரதேசத்தினை ஆராய்ந்து இது இராமாயணத்தில் வரும் இராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானத்தின் ஓடு பாதையாக முன்னர் இருந்திருக்கலாம் எனவும், அதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன, என்று தனது நூலில் கூறியுள்ளார். இதுவும் அவரின் கற்பனை என்று கூடக் கூறலாம்.

இக்கருத்துக் கூட கற்பனை என்று மட்டுமே நம்மால் எண்ண முடிகின்றது உண்மையில் விஞ்ஞானக் கருவிகள் இருக்க முடியாத அந்தக் காலத்தில் ஆகாயத்தில் விமானங்கள் மூலம் பறப்பது பற்றியும் பல மைல்கள் ஏவுகணைகள் போல் நெடுந்தூரம் தாண்டிச்சென்று தாக்கக் கூடிய அஸ்திரங்கள் பற்றியும் எப்படி அவர்களால் கற்பனைகூடச் செய்ய முடிந்தது.
என்று நாம் சற்று நேரம் சிந்தித்துப் பார்க்க வேண்டியவர்களாகவும் இந்துக்கள் விமானத்தின் முன்னோடிகள் தானா ஆராயவும் தலைப்பட்டவர்களாக உள்ளோம். அத்துடன் மயனால் எழுதப்பட்ட மயன் மதம் என்னும் நூலிலும் அதன் விளக்க உரை காட்டும் நூலிலும் வானவூர்தியைப் பற்றியும் அவைகளின் அமைப்புமுறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமரங்கன சூத்திரா 11ம் நூற்றாண்டில் ‘இராமச்சந்திர தீட்சிதர்’ என்பவரால் எழுதப்பட்டது என்பார்கள். இதில் வான வெளிக் கப்பல்கள் எப்படிச் செலுத்தப்பட்டன, அதன் அமைப்பு முறை, என்பது பற்றி விரிவாகக் கூறுகின்றன. அதில் மூன்று விதங்களில் வான்வெளிக் கப்பல்களைச் செலுத்த முடியும் என்கிறது;

1. கீழிலிருந்து (பூமியிலிருந்து) விண்ணை நோக்கிப் பறப்பது.

2. வானவெளியில் பல திசைகளில் பறப்பது

3. மேலிருந்து (விண்ணிலிருந்து) கீழே இறங்குவது. (பூமி நோக்கி வருதல்)

சில வான்வெளிக் கப்பல்களில் சூரிய மண்டலம், மற்றும் நட்சத்திரங்கள் வரை சென்றுவர முடியும் என்றும் இவை மிக வேகமாகச் செல்லக்கூடியவை. அத்துடன் அவை பூமியிலிருந்து பறக்கும் போது அவற்றின் ஒலி புவியில் உள்ளவர்களுக்கு மிக மெல்லியதாகவே கேட்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் வான்வெளி விமானங்கள் விண்வெளியில் ஏவப்படும் போர்க்கருவிகள் பற்றியெல்லாம் கூறப்பட்டாலும் கூட இவற்றில் சில விடயங்கள் இருந்திருக்கலாம் என்று கருதலாமே தவிர, அவை இருந்தன, என்று கூறுவதற்கு புராண இதிகாசங்கள் ஆதாரமாகிவிடாது. அத்துடன் இதில் வரும் பாத்திரங்கள் கடவுளாகவும் அவதாரங்களாகவும் இருப்பதால் அவர்களால் மனிதனால் நடத்த முடியாத அற்புதங்களை நிகழ்த்தினார்கள் எனச் சொல்லலாம்.

நம்முன்னோர்கள் கர்ண பரம்பரையாகச் சொல்லப்பட்ட கதைகளை காவியமாக வடித்தனர். இருந்த போதும் அந்தக் காவியங்களில் கற்பனை இடம்பெறுவது தவிர்க்க முடியாததே. இருந்தபோதும் அந்தக்கால மனிதருக்கு விமானம் பற்றி தெளிவான சிந்தனை வெளிப்பட்டது வியப்பானதே.
சப்த ரிஷிகளில் ஒருவரான பரத்வாஜ் மஹரிஷி தாம் எழுதிய யந்திர சர்வஸ்வம் என்ற நூலில் பலவிதமான விமானங்களைப் பற்றியும் அவைகளைத் தயாரிக்கும் முறை பற்றியும் அவைகளின் செயல் திறன் பற்றியும் மிக விரிவாக கூறுகிறார்.

அவர் மட்டுமல்ல அகத்திய மஹரிஷியின் ‘சக்தி சூக்தம்’ என்ற நூலும் ஈஸ்வரர் என்பவரின் ‘கெளதாமினி காலா’ என்ற நூலும் ஷக்கானந்தரின் ‘வாயுதத்துப் பிரகரணம்’ நாரதரின் ‘வைஸ்வனா தந்திரம்’ மற்றும் ‘ஆகாச தந்திரம்’ போன்ற நூல்களும் நாராயண மஹரிஷி என்பவரின் ‘விமானச் சந்திரிகா’ ‘யந்திர கல்பம்’ ‘யானபிந்து சேதாயன’ ‘பிரதிபிகா வியோமயானர்ஹா’ ‘பிரகாலம்’ ஆகிய நூல்களும் ஆதிகால விமானங்கள் அதன் நுட்பங்கள் பற்றி விரிவாக கூறுகிறது.

மேலும் இதில் ஒரு விந்தையான உண்மையும் இருக்கிறது. விமானங்களைப் பற்றி மட்டும் அல்ல விமான ஓட்டிகள் எப்படி இருக்க வேண்டும் அவர்கள் மனோபாவம் எத்தகைய திடத்துடன் இருக்க வேண்டும் என்பது பற்றியும் பரத்வாஜ் மகரிஷி இரண்டு அத்தியாயங்களில் விரிவாக கூறுகிறார்.
விமான சாஸ்திரத்தில் கூறப்பட்ட 32 கொள்கைகளை நன்றாகக் கற்றுத் தேர்ந்தவனாகவும் யந்திரங்களின் நுட்பங்களை அறிந்தவனாகவும் வான வீதியில் விமானத்தை செலுத்தவும் நிலையாக நிறுத்தவும் முன்னும் பின்னும் மேலும் கீழும் வட்டமாகவும் தலைகீழாகவும் விமானத்தை ஓட்டத் தெரிந்தவனாகவும் புதிய விமானத்தை உருவாக்கத் தெரிந்தவனாகவும் எந்த நிமிடமும் மரணத்தை எதிர்நோக்கும் சக்தி உள்ளவனாகவும் தனது அச்சத்தை பிறர் பார்க்கா வண்ணம் மறைக்கும் திறன் படைத்தவனாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறுவது இன்றும் பொருந்தும் அல்லவா.
இனி ரிஷிகள் குறிப்பிடும் விமானங்களைப் பற்றி சிறிது பார்ப்போம்.

1. சக்தி யுகம் : வானத்திலிருந்தே எரிபொருளை சேமித்துக் கொண்டு பல நாட்கள் பறந்து கொண்டே இருக்கும் திறன் படைத்த விமானம் இது.

2. பூதவாஹா : முன்னும் பின்னும் சமவேகத்தில் பறக்கும் இயல்புடைய விமானம்.

3. தூமாயனா : எரிக்கப்பட்ட எரிபொருளையே தாமே புதிய எரிபொருளாகக் கொண்டு இயக்கக் கூடிய விமானம்.

4. கிதோகமா : சிகி, சிரிகாசினி போன்ற மரங்களை எரித்துப் பெரும் எண்ணையில் இயங்கக் கூடிய விமானம்.

5. ஹம் சுவாகா : சேமித்து வைக்கும் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் அபாரத்திறன் படைத்த விமானம்.

6. தாரமுஹா : வானிலிருந்து பூமியை நோக்கி வரும் எரிகற்களை எரிபொருளாக்கி இயங்கக் கூடிய விமானம்.

7. மாணிவஹா : சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் விஜய, பாத்ரா, ஆஷ்ஹா போன்ற உலோகப் பொருட்களாலும் செயற்கை ரசாயன உப்புகளாலும் செல்லக்கூடிய விமானம்.

8. மாராதசாஹா : இது வானில் இருந்தபடியே காற்றை உறிஞ்சி மின்சார சக்தியை எடுத்து இயங்கும் விமானம்.

இது தவிர ‘ஷக்டிங்கர்ப்பம்’, ‘விக்யுதம்’, ‘துருபதம்’, ‘குண்டலிகமும்’ போன்ற விமானங்கள் இருந்ததாகவும் பரத்வாஜர் குறிப்பிடுகிறார்.
விமானம் என்றால் என்ன என வைமானிகா சாஸ்திரம் இலக்கணம் கூறும் போது ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு காற்று வழியாக பறந்து செல்லும் கருவியே விமானம் என்கிறது. விமானத்தில் 32 சூட்சுமங்கள் இருப்பதாகவும் இவை அனைத்தும் விமானிக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறியதுடன் விமான அமைப்பு, விமானம் பறப்பது (ஏறுவது), இறங்கும் போது விமானத்தின் கட்டுப்பாடு, எனும் 3 தலைப்புக்களில் இந்த 32 சூட்சுமங்களும் அடக்குகின்றன.

அத்துடன் இதில் (வைமானிகா சாஸ்திரம்) விமான ஓட்டத்தைப் பதிவு செய்யும் கருவி. விமானத்திலிருந்து எதிரிகளைத் தாக்கும் ஏவுகணைகள், விஷவாயுக்கள், இறக்கைகளை நீட்டுவதும் மடக்குவதும், பருவ நிலைகளை உணர்த்தும் அமைப்பு மீரிய சக்தியைப் பயன்படுத்துதல், விமான ஓட்டி அணிய வேண்டிய உடை, உணவுப் பழக்க வழக்கம், விமானம் செய்யப் பயன்படுத்தப்படும் உலோகம், என்பன பற்றியெல்லாம் விரிவாகக் கூறுகின்றது.

குறிப்பாக விமானம் செய்யப் பயன்படும் உலோகம் பற்றிக் கூறும் போது வெப்பத்தைக் கிரகித்துக் கொள்ளும் உலோகமே உகந்தது எனக் கூறுகிறது. அத்துடன் விமானம் செய்யப் பயன்படும் உலோகங்களின் வகைகளும் சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் விமானத்தில் ஏழு வகையான கண்ணாடிகளும் வில்லைகளும் பொருத்தப்பட வேண்டும். இந்த வில்லைகள் ஆயுதங்களைப் பிரயோகிக்க உதவியதாகவும் இந்த வைமானிகா சாஸ்திரம் கூறுகின்றது.
அத்துடன் எதிரி விமானியின் கண்களை இருட்டாக்க லென்சுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் சூரிய ஒளியில் மின் சக்தியைப் பெற்று அதன் மூலம் எதிரி விமானிகளை அழிக்கும் முறைகளையும் குறிப்பிட்டுள்ளது.
இது நவீன விமானத்தின் லேசர் தொழில் நுட்பத்தையும் விஞ்சி நிற்பதிலிருந்து விமானத்தின் முன்னோடிகள் எம் மூதாதையர்களா? என எண்ணத் தோன்றுகிறதல்லவா.

மேலும் ஏழு மோடார்கள் மூலம் இவ்விமானங்களை இயக்க சக்தி கிடைப்பதாகவும், சூரிய சக்தி, இரசாயன சக்தி, மின் சக்தி, என்பவற்றின் மூலம் விமானம் முன்னோக்கி செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பறப்புக்களை மேற்கொண்டதாகவும் இதில் பெரும்பாலும் சூரியஒளியே பயன்படுத்தப்பட்டது, எனும் தகவலும் (வைமானிகா சாஸ்திரத்தில்) உள்ளது.
இந்தத் தகவல் நமக்கு ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறது அல்லவா! அத்துடன் இதில் ருக்ம, சுந்தர, திரிபுர, சகுன, என நான்கு வகையான விமான வகைகள் இருந்ததாகக் கூறுகின்றது. அதில் ருக்மவிமானம், சுந்த விமானம் ஆகியன சந்திர மண்டலத்திற்குச் சென்ற அப்போலோ விண்கலத்தை போன்ற அமைப்புடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

திரிபுர விமானம் தரையிலும் நீரிலும் செல்லக்கூடியது. இதன் வேகம் குறைவானது. என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் சகுன விமானமானது நம்முடைய நவீன விமானத்திற்கும் ராக்கெட்டுக்கும் இடைப்பட்ட அமைப்பைக் கொண்டது. இந்த விமானம் மூலம் எந்தக் கிரகத்திற்கும் சென்றுவர முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே இது வெறும் கற்பனையில் உருவான நூல் (வைமானிகா சாஸ்திரம்) என்று கூறமுடியாதுள்ளது. எனினும் அவற்றை கற்பனை எனக் கூறினாலும் அதில் உள்ள விமானம் பற்றி வியத்தகு நவீன தொழில் நுணுக்கங்கள் பற்றி பழங்கால மனிதன் ஒருவனுக்குத் தெரிந்திருந்தது வியப்பானதே.
சங்க இலக்கியமான புறநானூறு, மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, போன்றவற்றிலும் வானவூர்தி பற்றிய கருத்து காணப்படுகிறது. பெருங்கதை என்னும் பழந்தமிழ்க் காவியத்தில் வானவூர்தி வடிவமும் அதை இயக்கும் விதமும் விவரிக்கப்பட்டுள்ளன.

சீவகசிந்தாமணியில் வரும் மயிற்பொறியின் (மயில் போன்ற பறக்கும் பொருள்) செய்தியானது நமக்கு வியப்பினை ஏற்படுத்துகிறது.
அதன் பொறியினை வலஞ்சுழி மற்றும் இடஞ்சுழியாக திருகுவதன் மூலம் அம்மயிற் பொறி வானமேகங்களிடையே பறக்கவோ காண்பவர் மயிர் சிலிர்க்கும் வகையில் தரையில் இறங்கச் செய்யவோ முடியும் என்கின்றது அந்நூல்.

இராமாயணத்தில் இராவணன் செலுத்திய புட்பக விமானம் சீவகசிந்தாமணியில் விவரித்த மயிற்பொறி விமானத்தை விட எல்லா வகையிலும் மேம்பட்டது என்கின்றனர் சான்றோர்.
மணிமேகலையிலும் கூட வான்வழிப் பயணங்கள் பற்றிச் சித்திரிக்கப்பட்டுள்ளன.

சிப்பதிகாரத்திலும் வானவூர்தி பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியமான புறநானூற்றில் வலவன் ஏவா வான ஊர்தி (புறம்-27) என்ற வரி விமானத்தை ஓட்டுபவர் இல்லா வானவூர்த்தியைக் கொண்டிருந்தான். என்கின்ற கருத்து நம் தலையைச் சுற்ற வைக்கின்றது. விமான ஓட்டியை வலவன் என அழைக்கின்றது புறநானூறு. இது நிச்சயமாக கற்பனையில் உருவான கதை என கூற முடியாது.

புறநானூற்றுத் தமிழர் உண்மையில் நமக்கு முன்னோடிகளே. அந்த முன்னோட்டத்தை இன்றைய தமிழராகிய நாம் உணரவில்லை மாறாக தமிழை மறக்கவே முனைவது கவலையையே தருகின்றது. ஒரு காலத்தில் கற்பனையாக இருப்பது பிறிதொரு காலத்தில் நிஜமாகி விடுவதுண்டு.
உதாரணமாக ஜூல்வொர்னி என்பவர் 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய உலகைச் சுற்றிவர எண்பது நாட்கள் எனும் கற்பனை நூலில் நீருக்கடியில் செல்லும் கப்பல்கள், சந்திர மண்டலத்திற்கு வான்வெளிக் கப்பல்களின் மூலம் பயணம் செய்வது பற்றியெல்லாம் எழுதியிருந்தார். ஆங்கிலத்தில் விமானப் பயணம் பற்றி எழுந்த நூல்களில் இதுவே முக்கியமானதாகும்.

பொதுவாக ஆங்கிலத்தில் எழுந்த நூல்கள் எல்லாம் பிரித்தானியாவில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியின் பின்னரே எழுந்தது எனலாம். விண்ணியல் பற்றிய வரலாற்றை இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் அறிந்திருந்தது. ஆனால் அது எங்கே அறிமுகமானது எனத் தெரியவில்லை. தமிழில் மட்டுமல்ல வேறு மொழிகளிலும் இவைபற்றிய அறிவு காணப்பட்டது.

232 களில் சீனத் தார்த்தாரி இனத்தவர்கள் ராக்கட்கள் பயன்படுத்தியதற்கான வரலாற்றுச் சான்றாக மொங்கோலிய அரசனான ஜெங்கிஸ்கானின் மகனான ஒக்டாயின் தலைமையின் கீழ் மொங்கோலியர்கள் சீனத் தார்த்தாரியர்களின் காய்பெங்பூ நகரைத் தாக்கிய போது சீனர்கள் தமது நகரைக் காக்க ரொக்கட்களை பயன்படுத்தினர், என்பதிலிருந்து அவர்கள் வானியல் பற்றி அறிந்திருந்தனர் என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.

ஆனால் பிற்பட்ட காலத்திலேயே இதை இவர்கள் அறிந்திருந்தனர். எனவே விமான தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் நிச்சயமாக இந்துக்களாகவே இருந்திருக்க வாய்ப்புள்ளது.

மேலும் கி. பி. 1280ல் ஹசன் அல்ரமா என்பவரால் அரபு மொழியில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதி ஒன்றில் ராக்கட்களை அமைப்பது, விண்வெளியில் பயணத்தை மேற்கொள்வது, அவற்றை எப்படி அமைப்பது, வெடிமருந்து தயாரிப்பது என்பது பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றது. ஆங்கிலேயருக்கு எதிராக 1780இல் இளவரசன் ஹைதர் அலிகான் ராக்கட் தாக்குதல் செய்து ஆங்கிலேயரை வியப்பில் ஆழ்த்தினான் என்று ஒரு குறிப்பும் உண்டு.
இவையும் பிற்பட்ட காலத்தில் எழுந்தவைகளே எனலாம். அத்துடன் கிறிஸ்துவின் காலத்திலும் வானதேவதைகள் பற்றிக் குறிப்பிட்டாலும் அதற்கு முன்னரே இந்து இலக்கியங்களில் விமானம் பற்றிய சிந்தனை காணப்படுகிறது.

சீன, மற்றும் இலத்தீன் மொழிகளில் விமானம் பற்றிய செய்திகள் அந்நூல்களில் காணப்பட்டாலும் அவை எல்லாம் பிற்காலத்தில் எழுந்தவைகளே எனலாம். ஆகவே இந்து தர்மத்தைக் கூறுகின்ற புராணங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள் ஆகியவற்றில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே விமானம் பற்றிய சிந்தனை இருந்திருக்கின்றது.
வேதம் குறிப்பிடும் காற்றடைத்த ரதங்கள் இரண்டு அடுக்கு, மூன்று அடுக்கு என இருந்ததாகவும் பல சான்றுகள் கிடைக்கின்றன. ஆனால் இத்தனை விஞ்ஞான வளர்ச்சி அடைந்துவிட்ட இந்த நாளில்கூட சில அடுக்கு விமானங்கள் என்பது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

இன்று செயற்கைக் கோள்களை அனுப்பி புவியின் கனிவளங்களை நாம் ஆராய்வதை போல் அன்றும் மாணிவாஹ விமானம், லோபகர்ப பிரசரணம், அமுஷவாஹா போன்ற விமானங்கள் வானமண்டலத்திலே நிலையாக இன்று பூமியில் ஏற்படும் சீதோஷன மாற்றங்கள் கனிம வகைகள் இருக்கும் இடங்கள் பற்றியும் தகவல்கள் அரசர்களுக்கும் தந்ததாகவும் நாரத மஹரிஷி எழுதிய வைஸ்னா தந்திரம் என்ற நூலில் குறிப்பு இருக்கிறது.
இது மட்டுமல்லாது ஒரு விமானத்தில் இருப்பவன் பேசும் ஒலி அதிர்வுகளை வைத்து அடுத்த விமானத்திற்கு தகவல் சொல்லும் ‘அநுக்கிரம ஷாபிதா’ என்ற கருவி இருந்ததாக கெளதாமினி மஹரிஷி குறிப்பிடுகிறார்.

‘ரூப கார்ஷண ரகசியம்’ என்ற கருவி எதிர் விமானத்திற்குள் ஒளிக்கதிர்கள் பிரயோகித்து அந்த விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் சாதனங்கள் அங்கே இருப்பவர்களின் வண்ண ஆடைகள் ஆயுதங்கள் போன்றவற்றை மிகத் துல்லியமாக தாம் பொருத்தப்பட்டிருக்கும் விமானத்தின் தலைமையகத்திடம் தெரிவித்து விடும் என்று நாராயண மகரிஷி தமது நூலில் கூறுகிறார்.

‘தீஷமபதி’ என்ற கருவி எதிரிகள் விமானத்தை கவனித்து அதன் வருகையை முன்கூட்டியே ‘சத்பிதா’ என்ற விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள ‘அபஸ்மாராதாபம்’ என்ற ஆயுதப் பகுதிக்கு தகவல் அனுப்பும் என்றும் உடனே அந்த அபஸ்மரா கருவி ‘ஷர்ஷன்’ என்ற ஏவுகணையை 87 டிகிரி வெப்பத்தில் வெளியிட்டு எதிரி விமானத்தை அழித்து விடுமென்றும் ‘திக்பிர தர்ஷண’ ரகசியம் என்ற நூல் கூறுகிறது.

இன்னும் பலவிதமான விமானங்களைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் பழமையான ஏட்டுச் சுவடிகளிலும் கிரகந்த நூல்களிலும் காணக் கிடைக்கின்றன.

பழங்கால விமான இயலைப் பற்றிய இத்தனை நூல் ஆதாரங்கள் கிடைக்கின்றனவே. நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட விமானங்களோ அல்லது அதன் கருவிகளோ ஒன்று கூட இன்றைய ஆதாரத்திற்கு இல்லையா? என்ற கேள்வி நம்மில் பல பேருக்கும் எழக்கூடும். அதற்கான பதில் எந்த புறக் கருவிகளுமே இன்றுவரை நம்மிடம் கிடைக்கவில்லை என்பதுதான் அதற்கு காரணம். அவைகள் ஏதோ ஒரு மஹாப் பிரளயத்தினால் அழிந்து இருக்க வேண்டும் அல்லது அவைகள் உருவாக்கினவர்களே எந்த காரணத்தின் அடிப்படையிலேயோ அழித்து இருக்க வேண்டும்.

பின்னர் நூல் ஆதாரம் மட்டும் எப்படி இருக்கிறது என்று கேட்டால் அக்கால நூல்கள் எதுவுமே எழுதப்படவில்லை காலங்காலமாக குருமுகமாக மனப்பாடம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. அதன் பின்னரே தற்போது கிடைக்கின்ற நூல்கள் எழுத்து வடிவம் பெற்று இருக்கிறது. இருப்பினும் இந்த விஷயத்தில் இன்னும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டால், பல புதிய ஆதாரங்கள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

அயல்கிரக வாசிகள் பூமிக்கு வந்து சென்றதற்கான ஆதாரங்களைத் தேடுவதில் முனைப்பாக இருக்கும் நமது ஆராய்ச்சியாளர்கள் நாம் அயல் கிரகத்திற்கு மேற்கொண்ட பயணத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் இன்னும் பயன் உடையதாக பல புதிய ஆதாரங்களை பெற்றுத் தருவதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நாம் நம்மைச் சுற்றி உள்ள விஷயங்களைப் பற்றி ஆராய்வதில் முனைவதில்லை. நமக்கு அப்பால் இருக்கும் விஷயங்களிலேயே அதிக கவனம் செலுத்துகிறோம்.

செவ்வாய் கிரகத்தைப் பற்றி தெரிந்த அளவிற்கு நம் பூமியைப் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருப்போமானால் இன்றை இயற்கைய பேரழிவுகளை எதிர்கொள்வதற்கான சக்தி நமக்கு கிடைத்திருக்கும்.
ஆனால் நம் முன்னோர்கள் எந்தவித விஞ்ஞான உபகரணமும் இன்றி நம்மைச் சுற்றி உள்ள பொருட்களை ஆளுமைப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் வழியில் நாம் சென்றால் பூமியைப் பாதுகாப்பது மட்டுமன்றி அயல் கிரகங்களிலும் நமது குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்கலாம்.